தமிழர்கள் குறித்து அவதூறு: மத்திய அமைச்சர் கோரிக்கை; நீதிமன்றம் மறுப்பு
தமிழர்கள் குறித்து அவதூறு: மத்திய அமைச்சர் கோரிக்கை; நீதிமன்றம் மறுப்பு
தமிழர்கள் குறித்து அவதூறு: மத்திய அமைச்சர் கோரிக்கை; நீதிமன்றம் மறுப்பு
ADDED : ஜூலை 10, 2024 05:43 PM

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசிய விவகாரத்தில் மத்திய பெண் இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
லோக்சபா தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு தமிழகத்தில் பயிற்சி பெற்று வருபவர்கள் இங்கு குண்டு வைக்கின்றனர் எனக்கூறினார்.
இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து ஷோபா கரந்த்லாஜே சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தி.மு.க.,வினர் அளித்த புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்த்லாஜே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது தமிழர்களை நான் அவதூறாக பேசவில்லை. என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குண்டு வைத்த நபர் தமிழகத்தில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருந்தால், பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் எனக்கூறி வழக்கின் விசாரணையை நாளை மறுதினம்( ஜூலை 12) ஒத்திவைத்தது.