Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'மாணவர் சக்தியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கவே அரசு திட்டங்கள்' பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு

'மாணவர் சக்தியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கவே அரசு திட்டங்கள்' பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு

'மாணவர் சக்தியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கவே அரசு திட்டங்கள்' பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு

'மாணவர் சக்தியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கவே அரசு திட்டங்கள்' பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு

ADDED : ஜன 02, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
திருச்சி,:''மாணவர் சக்தியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சியாக தான், தமிழக அரசின் திட்டங்கள் உள்ளன,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருச்சி, பாரதிதாசன் பல்கலை, 38வது பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

'எங்கள் வாழ்வும்,- எங்கள் வளமும்- மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு' என, திராவிட கொள்கையை, தமிழ் நிலத்தில் முழங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள இந்த பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரதமர், இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்தமைக்கு நன்றி.

இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம். 'கல்வியில் சிறந்த' என்ற பட்டியல் எடுத்தால், அதில் தமிழகத்தின் கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம் பெற்றிருக்கும்.

உயர்ந்து நிற்கிறோம்


நுாறு ஆண்டுகளுக்கு முன், நீதிக்கட்சி காலத்தில் கல்விக்காக போடப்பட்ட விதை தான், இன்றைக்கு வளர்ந்து, கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம்.

திராவிட மாடல் அரசு, அனைவருக்கும் கல்வி,- அனைவருக்கும் கல்லுாரி கல்வி,- அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கோடு தான், சமூகநீதி புரட்சியை கல்வி துறையில் நடத்தி வருகிறது.

'இன்னார் தான் படிக்க வேண்டும்' என்று இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறோம்.

தமிழக மாணவர்களை, -படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றியாளராக்குவதற்கு, 'நான் முதல்வன்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் வாயிலாக, அரசு பள்ளியில் படித்து, கல்லுாரிக்குள் நுழையும் 3 லட்சத்து, 45 ஆயிரத்து, 362 மாணவியருக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

போட்டி தேர்வுகள், ஆட்சிப்பணி தேர்வுகள், திறன்சார்ந்த தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார் செய்வதற்காக, மதுரையில், 'கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகம்' அமைக்கப்பட்டிருக்கிறது.

'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, இரண்டு ஆண்டுகளில், 29 லட்சம் மாணவர்களுக்கும், 32,000 ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

ஓராண்டில், 1.4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, அனைத்து தரப்பு மாணவர்களும் தொழிற்கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த, 2021- -22, 2022- -23, 2023- -24 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில், இந்த இட ஒதுக்கீட்டில், 28,749 மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

அவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம், பஸ் கட்டணம் அனைத்தையும், தமிழக அரசே ஏற்று, 482 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

இவை அனைத்துமே, தமிழக மாணவர் சக்தியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சிகள்.

திருச்சி, பாரதிதாசன் பல்கலை, உலக பல்கலை தர வரிசை பட்டியலிலும், தேசிய தர வரிசை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழகம் முதலிடம்


அத்தகைய சிறப்புமிக்க இந்த பல்கலையில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சிலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள், தமிழ் மையம் ஆகிய அனைத்தையும் தொடங்கியது, திராவிட மாடல் அரசு தான்.

உயர் கல்விக்கான அனைத்து உட்கட்டமைப்புகளையும் உருவாக்கியதன் விளைவாக தான், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையிலும், பிஎச்.டி., மாணவர் சேர்க்கையிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த, 100 கலை, அறிவியல் கல்லுாரிகளின் தேசிய தர வரிசையில், தமிழகத்தின், 35 கல்லுாரிகள் உள்ளன.

இந்தியாவின் தலைசிறந்த, 100 பல்கலைகளில், 22 பல்கலைகளும், தலைசிறந்த, 100 பொறியியல் கல்லுாரிகளில், 15 பொறியியல் கல்லுாரிகளும் தமிழகத்தில் உள்ளன.

எதிர்காலம் உண்டு


இதே போல், பல்வேறு பிரிவுகளில், 146 கல்வி நிறுவனங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில், தேசிய தரவரிசை பட்டியலில், தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது.

கடந்த, 2023 ஆகஸ்ட் வரை, தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் தரவரிசை பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 398 கல்லுாரிகளும், 38 பல்கலைகளும் இடம் பெற்றுள்ளன. உயர் கல்வியின் பூங்காவாக, தமிழகமும், தமிழகத்தில் உள்ள பல்கலைகளும்- திகழ்கின்றன.

கல்வியில் சமூக நீதியையும், புதுமைகளையும் புகுத்துவதே, பல்கலைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய பல்கலைகளுக்கே, சிறப்பான எதிர்காலம் உண்டு.

பட்டம் பெற்ற மாணவ - மாணவியர் தான், நாட்டின் எதிர்காலம். தேர்ந்தெடுக்கும் துறையில், சிறந்த அதிகாரிகளாக, தொழில் முனைவோராக சிறந்து விளங்குங்கள்.

நீங்கள் கற்ற கல்வியை பயன்படுத்தி, பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் உங்கள் சேவையை திரும்ப வழங்குங்கள். முக்கியமாக, சிறந்த மனிதர்களாக விளங்குங்கள்!

உங்கள் வெற்றிக்கு உறுதுணையாகும் பட்டங்களை வழங்கிய பல்கலைக்கும், பட்டம் பெற காரணமான ஆசிரியர்களுக்கும், பெருமை தேடித் தாருங்கள்.

இந்தியாவிற்கும், தமிழகத்துக்கும் புகழ் சேருங்கள்!

இது தான் முதல்வராகவும், தந்தையின் உணர்வோடும் நான் வைக்கும் வேண்டுகோள்.

இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us