ADDED : செப் 15, 2025 01:26 AM

திருச்சி: திருச்சியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, த.வெ.க.,வினர் தனியார் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன், நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமய தமிழன், விக்னேஷ்குமார், துளசிமணி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத த.வெ.க., நிர்வாகிகளும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, திருச்சி மேயர் அன்பழகன் அளித்த பேட்டி:
திருச்சியில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார பயணத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மாநகராட்சியும் பாதுகாப்பு பணியை செய்தது. திருச்சி மாநகர் முழுதும், மாநகராட்சி சார்பில் பேரி கார்டுகள், தடுப்புகள் வைக்கப்பட்டன.
பிரசார கூட்டத்துக்கு வந்தோர், அவற்றையெல்லாம் சேதம் அடைய செய்துள்ளனர். விஜய் பிரசாரத்தின் போது, சேதமடைந்த பொது சொத்துக்கள் குறித்த விபரங்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
முழுமையான விபரங்கள் கிடைத்ததும், இழப்பீட்டுத் தொகையை வசூல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.