துணிப்பை தரும் ஏ.டி.எம்., இயந்திரம்: புதுச்சேரியை பின்பற்றுமா தமிழக அரசு?
துணிப்பை தரும் ஏ.டி.எம்., இயந்திரம்: புதுச்சேரியை பின்பற்றுமா தமிழக அரசு?
துணிப்பை தரும் ஏ.டி.எம்., இயந்திரம்: புதுச்சேரியை பின்பற்றுமா தமிழக அரசு?
ADDED : ஜன 31, 2024 02:14 AM
திருப்பூர்:'பாலிதீன் கேரி பேக்' புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, புதுச்சேரி அரசு செய்துள்ளது போன்று, துணிப்பை ஏ.டி.எம்., முறையை கொண்டு வரலாம்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.மண் வளத்தை மலடாக்கும் பாலிதீன் கேரி பேக், டம்ளர் உள்ளிட்டவற்றின் பயன்பாடுக்கு, மாநில அரசு தடை விதித்துள்ளது; இருப்பினும், பாலிதின் புழக்கம் கட்டுக்குள் வரவில்லை. கடைகளில், சர்வ சாதாரணமாக பாலிதீன் கவர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாலிதின் பை புழக்கத்தை கட்டுப்படுத்த, மாநில அரசு 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டத்தை கொண்டு வந்தது.பொதுமக்களுக்கு, மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மஞ்சப்பை இலவசமாக வழங்கப்பட்டும் வருகிறது. இது, மாணவ, மாணவியர், பொதுமக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பும் பெற்ற நிலையில், பாலிதீன் கவர், புழக்கம், முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை.
புதுச்சேரி அரசு துணிப்பை ஏ.டி.எம்., மையங்களை, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் நிறுவியுள்ளது. அந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில், 10 ரூபாய் நோட்டை செலுத்தும் போது அழகிய துணிப்பை கிடைக்கிறது.
புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த பையில், 'பசுமையான புதுவையை உருவாக்குவோம்,' என் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
'இதேபோன்று, தமிழகத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், உழவர் சந்தை, வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில் இத்தகைய துணிப்பை ஏ.டி.எம்.,களை வைக்கலாம்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.