நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
நீர்த்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; உதவி இயக்குநரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்
ADDED : மே 16, 2025 10:24 AM

மதுரை: மதுரையில் நிலத்தடி நீர்த்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை சின்ன சொக்கிகுளம் எச்.ஏ.கே., ரோட்டில் இந்த அலுவலகம் உள்ளது. உதவி இயக்குநராக கமலக்கண்ணன் உள்ளார். இவர், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அதிகாரியாகவும், தென் மாவட்டங்களுக்கான கூடுதல் பொறுப்பும் வகித்து வருகிறார்.
இரண்டு நாட்களாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தனியார் மினரல் வாட்டர் தயாரிப்பு கம்பெனி உரிமையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அதில் பல கம்பெனிகள் அவருக்கு லஞ்சம் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், மதுரை அலுவலகத்தில் நேற்று அதுபோன்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, சூர்யகலா, பாரதிபிரியா ஆகியோர் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர். கமலக்கண்ணனிடம் 4 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் 2 கவர்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயருடன் பணம் இருந்தது. அவரது சட்டை பையிலும் சோதனையிட்டு கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கமலக்கண்ணனிடம் தொடர் விசாரணை நடக்கிறது.