Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பழமையான கொற்றவை சிற்பம் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு

பழமையான கொற்றவை சிற்பம் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு

பழமையான கொற்றவை சிற்பம் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு

பழமையான கொற்றவை சிற்பம் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு

ADDED : ஜன 11, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஒன்றியம் அங்கனுாரில், பழமையான கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம், ஸ்ரீதர், தாமரை, குமரவேல், உதயராஜா, சுதாகர் ஆகியோர், உளுந்துார் பேட்டை பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கனுார் கிராமத்தில், ஐந்தடி உயரம், மூன்றடி அகலமுள்ள பலகை கல்லில் பெண் தெய்வத்தின் புடைப்புச் சிற்பத்தை கண்டறிந்தனர்.

சிற்பத்தின் தலையில் கரண்ட மகுடம், காதுகளில் குண்டலம், கழுத்தில் ஆரம், கைகளில் வளைகள், இடுப்பிலிருந்து தொடை வரை நீண்ட முடிச்சுடன் கூடிய ஆடை, வலது மேல் கையில் பிரயோக சக்கரம், மற்ற வலது கைகளில் வாள், அம்பு, முஷ்டி முத்திரைகள் உள்ளன.

இடது கைகளில் சங்கு, கேடயம், வில், இடையில் ஊரு முத்திரை ஆகியவற்றுடன் உள்ளது. எருமை தலையின் மீது நிற்கும் தெய்வத்தின் பின்புறத்தில் கொம்புள்ள மான் உள்ளது. இந்த அடையாளங்களை வைத்து, இது கொற்றவை சிற்பம் என, அடையாளம் காணப்பட்டது.

கொற்றவையின் இடையருகே சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டில், அங்கனுார் என்ற ஊரைச் சேர்ந்த ஆறலை என்பவர், இந்த சிலையை செய்த தகவல் வட்டெழுத்தில் உள்ளது.

''இதில் உள்ள எழுத்துகள், ஐந்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும்,'' என, கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் சுப்பையா கூறினார்.

இதனால், தமிழகத்தில் இதுவரை கிடைத்த கொற்றவை சிற்பங்களில், இதுவே மூத்ததாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us