சென்னையில் ஒரே நாளில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள்: கொள்ளையர் மூவர் கைது
சென்னையில் ஒரே நாளில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள்: கொள்ளையர் மூவர் கைது
சென்னையில் ஒரே நாளில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள்: கொள்ளையர் மூவர் கைது

சென்னை: சென்னையில் இன்று காலையில் மட்டும் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உ.பி., மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இருவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். 3வது நபர் ரயிலில் கைது செய்யப்பட்டார்.
அண்மைக்காலமாக தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனை, வாகனங்கள் திருட்டு, பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என நாள்தோறும் ஏதேனும் ஒரு பகுதியில் குற்றங்கள் நடந்து வருவதாக புகார்கள் பதிவாகின்றன. புகார்கள் மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும், பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் அறிய முடியாத நிலையே காணப்படுகிறது.
இந் நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 25) காலை மட்டும் ஒரே நாளில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதே பகுதியில் உள்ள சாஸ்திரி நகரிலும் செயின் பறிப்பு நடந்துள்ளது.
கிண்டி மைதானத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகை, சைதாப்பேட்டையில் பெண்ணிடம் 1 சவரன், வேளச்சேரி, பள்ளிக்கரணையிலும் தலா ஒரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் நடந்த 7 செயின் பறிப்பு சம்பவங்களில் 26 சவரன் நகைகள் பறிபோய் உள்ளன. அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு இருக்கலாம், பைக்கில் வந்த 2 பேராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் அனைத்தும் அரங்கேறி இருப்பது அப்பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி., காட்சிகளில் தெரிய வந்துள்ளது.
போலீஸ் விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர் விமானம் மூலம் ஹைதராபாத் தப்பிச்செல்ல முயன்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் விமானத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
ரயிலில் தப்பிச் சென்ற 3வது குற்றவாளியை ஆந்திராவில் ரயிலில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.