Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தத்தை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி

ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தத்தை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி

ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தத்தை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி

ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தத்தை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி

ADDED : ஜூன் 05, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
சென்னை:திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தத்தை, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்க பாட்டியலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள், சதானந்தம் உட்பட ஐந்து பேர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்துள்ளனர்.

அப்போது சதானந்தத்தை அவர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கு ஜாமின் கோரி, டில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று நீதிபதி சுதிர் குமார் சிரோஹி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சதானந்தம் சார்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜரானார்.

மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'இந்த வழக்கின் விசாரணை அதிகாரியின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால், அவர் ஆஜராக முடியவில்லை. சதானந்தம் மீதான விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து, அவரது கருத்தையும் அறிய வேண்டி உள்ளது. இதனால், ஜாமின் தரக்கூடாது' என, வாதிட்டார்.

இதற்கு சதானந்தம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். 'சிறையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் சதானந்தத்திற்கு தரமான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்ற நீதிபதி, சதானந்தத்தை டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்ததுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, சிறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us