பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்குமா வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினர்
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்குமா வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினர்
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்குமா வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினர்
ADDED : ஜூன் 17, 2024 12:36 AM
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் மே 9ல் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள சுதர்சன் பட்டாசு ஆலையில் மே 9ல் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிமையாளர் சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடும், இறுதிச் சடங்கிற்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
லோக்சபா தேர்தல் முடிந்து ஜூன் 4 ல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வரை உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கோ அல்லது காயமடைந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. இதனால் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமாக இருந்த பெற்றோரை இழந்த குழந்தைகள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிரமம்
இது குறித்து வெடிவிபத்தில் உயிரிழந்த மத்திய சேனையைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி பாப்பாத்தி கூறுகையில் எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் 8 ம் வகுப்பும், இளைய மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். என் கணவர் மட்டுமே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவர் உயிரிழந்த நிலையில் குடும்ப செலவு, குழந்தைகளின் படிப்பு செலவுக்கு சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும் என்றார்.
வெடி விபத்தில் உயிரிழந்த மத்திய சேனை வீரலட்சுமியின் சகோதரர் வெள்ளைச்சாமி கூறுகையில் எனது சகோதரி வீரலட்சுமிக்கு 8 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உட்பட 3 மகள்கள் உள்ளனர். வீரலட்சுமி வேலைக்கு சென்று 3 குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தார். அவர் உயிரிழந்த பின் நான் தான் 3 குழந்தைகளையும் கவனித்து வருகிறேன். அவர்களின் கல்விச் செலவிற்கு மிகவும் சிரமப்படுகின்றோம். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.