Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை

தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை

தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை

தேர்தலில் பா.ஜ., தோல்வி ஏன்? கருத்தறியும் கூட்டத்தில் ரகளை

ADDED : ஜூலை 02, 2024 05:51 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : சென்னையில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஆதரவாளர்கள், நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம், கைகலப்பு உள்ளிட்டவை அரங்கேறியுள்ளன. நாற்காலிகளை துாக்கி வீசி, நிர்வாகிகள் ரகளை செய்துள்ளனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., 19 தொகுதிகளிலும்; அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நான்கு பேரும் போட்டியிட்டனர். ஒரு தொகுதியில் கூட பா.ஜ., வெற்றிபெறவில்லை.

தொகுதி வாரியாக


'பூத் கமிட்டி' நிர்வாகிகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுக்கு, கட்சி மேலிடம் தலா ஒரு தொகுதிக்கு, 15 கோடி ரூபாய் வரை வழங்கியதாக கூறப்படும் நிலையில், இந்த பணத்தை மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் முறையாக வழங்காமல் பதுக்கிவிட்டதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன.

எனவே, ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், தலா இரண்டு - மூன்று தொகுதிகள் வாரியாக, பா.ஜ., களப்பணி ஆய்வு கூட்டம் நடத்துகிறது. இதற்காக, ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் கட்சியின் மூத்த தலைவர்களாக இருப்போர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

அதன்படி, தென் சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள், மாவட்ட தலைவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அதற்கு மாவட்ட தலைவர்களும், அவருடைய ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினர் இடையே ஆபாசமாக திட்டிக் கொண்டதுடன், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: விருகம்பாக்கம் தொகுதியில் நேற்று முன்தினம் காலை ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், மாநில நிர்வாகிகள், கட்சியினர் என பலர் பங்கேற்றனர்.

அப்போது, தொண்டர் ஒருவர், 'தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள், தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் வழங்கிய பணத்தை கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள் வரை முறையாக தரவில்லை' என்று புகார் கூறினார். இதற்கு, காளிதாசின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாற்காலிகள் துாக்கி வீசப்பட்டன.

மோதல் சூழல்


அதை தொடர்ந்து, தி.நகர் மற்றும் சைதை தொகுதிக்கான கூட்டம், தி.நகரில் நடந்தது. அங்கும் ஒரு நிர்வாகி, 'காளிதாஸ், ஜாதி அரசியல் செய்கிறார்; அவர் கட்சியினரை மதிக்கவில்லை' என, குற்றஞ்சாட்டினார். இதற்கும், காளிதாஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மோதல் சூழல் உருவானது.

வேளச்சேரி தொகுதிக்கான கூட்டத்தில் பேசிய ஒரு நிர்வாகி, 'மேலிடம் கொடுத்த பணம் நிர்வாகிகளுக்கு வந்து சேரவில்லை; தேர்தல் தினத்தன்று காலை உணவும், மதிய உணவும் தாமதமாக கிடைத்தன; வேறு பலருக்கு கிடைக்கவில்லை.

உரிய நடவடிக்கை


'இந்த கூட்டத்தை சிறிது நேரம் மட்டும் நடத்தி, அரைகுறையாக கேட்டு செல்லக் கூடாது; நீண்ட நேரம் நடத்தி கருத்துக்களை முழுமையாகக் கேட்டு, அதை கட்சித் தலைமைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

பின், அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மாநில நிர்வாகி கனகசபாபதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் புறப்பட இருந்தனர்.

அப்போது அவர்களிடம், பாலசுப்ரமணியம் என்பவர், தன் கருத்தை தெரிவிக்க முயன்றார். அவரை, தென் சென்னை மாவட்ட நிர்வாகி சாய் சத்யன் திட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பாலசுப்ரமணியம், சாய் சத்யன் தன்னை தாக்க வந்ததாகவும், மிரட்டியதாகவும், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புகார் அளித்த பாலசுப்ரமணியம், தன் புகாரை நேற்று திரும்ப பெற்றதாக தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, காளிதாஸ் மற்றும் சாய் சத்யன் கருத்தை அறிய முயன்று போனில் தொடர்பு கொண்டோம். இருவரும் போனை எடுக்கவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us