எஸ்.ஐ., போல நடித்து இளம் பெண்ணிடம் பணம் பறித்தவருக்கு வலை
எஸ்.ஐ., போல நடித்து இளம் பெண்ணிடம் பணம் பறித்தவருக்கு வலை
எஸ்.ஐ., போல நடித்து இளம் பெண்ணிடம் பணம் பறித்தவருக்கு வலை
ADDED : ஜூன் 03, 2024 05:50 AM
சென்னை : போலீஸ் எஸ்.ஐ.,யாக நடித்ததுடன், சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள ஆபாச படத்தை நீக்குவதாக கூறி, மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 23 வயது பெண், சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அவரது மொபைல் போன் எண்ணிற்கு, மே 27ல், மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை போலீஸ் எஸ்.ஐ., என, அறிமுகம் செய்த அவர், 'யு டியூப்'பில் உங்கள் ஆபாச படம் உள்ளது. அதை நீக்க, 9,000 ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால், பயந்து போன அந்த இளம்பெண், மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 6,500 ரூபாய் அனுப்பி உள்ளார்.
அப்படியும் அந்த மர்ம நபர் விடுவதாக இல்லை. இளம் பெண்ணின் சொந்த ஊரில் உள்ள, அவரது தந்தையை தொடர்பு கொண்டு உள்ளார். அவரிடமும் தன்னை எஸ்.ஐ., என, அறிமுகம் செய்த நபர், மகளின் ஆபாச படத்தை நீக்க, 1 லட்சம் ரூபாய் தர வேண்டும்; மறுத்தால் உங்கள் குடும்ப மானம் காற்றில் பறந்துவிடும் என்று மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசில் இளம் பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி, ஆபாசமாக பேசுதல், மிரட்டி பணம் பறித்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.