தமிழகத்தில் கஞ்சா, குட்கா தாராளப் புழக்கம்
தமிழகத்தில் கஞ்சா, குட்கா தாராளப் புழக்கம்
தமிழகத்தில் கஞ்சா, குட்கா தாராளப் புழக்கம்

தனிப்படையினர் 'ரெய்டு'
தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் கஞ்சா பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையை கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இதற்காக பிரத்யேக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
5 மாதங்களில், 117 வழக்கு
மாநகரை பொறுத்தவரை கஞ்சா விற்பனையில் போலீசார் அன்றாடம் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு கடந்த ஜன., முதல் மே மாதம் வரை என, ஐந்து மாதங்களில், 117 வழக்குகள் பதியப்பட்டு, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், 18 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 188 கிலோ கஞ்சா; ஒரு லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய் பணம்; 13 டூவீலர்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரயில் மூலம் கடத்தல்
போலீசார் சோதனையை மீறியும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் எளிதாக கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருகின்றனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, சோதனை செய்யப்படும் முந்தைய ரயில்வே ஸ்டேஷன்களில் இறங்கி, அங்கிருந்து வாகனங்களில் மாநகருக்குள் கொண்டு வருகின்றனர். கூரியர், ஆம்னி பஸ்களில் கடத்தி வந்து புழக்கத்தில் விடுகின்றனர்.
குட்கா கடைகளுக்கு 'சீல்'
மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா விஷயங்களில் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். குட்கா விற்பனை கடைகளில், பறிமுதல் செய்வதோடு கடைகளுக்கு 'சீல்' வைத்து வருகின்றனர். சமீபத்தில், பெருமாநல்லுார் அருகே, மூன்று கார்களில் கடத்தப்பட்ட, ஆயிரத்து, 650 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கடைகளுக்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.