வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்: அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க உத்தரவு
வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்: அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க உத்தரவு
வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்: அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : ஜூலை 03, 2024 06:47 AM

சென்னை:'வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எதற்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் தாக்கல் செய்த மனு: அரசு வாகனங்கள் தவிர, இரண்டு மற்றும் நான்கு சக்கர தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில், 'போலீஸ், அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்' என, ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, ஏப்ரல், 27ல் சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.
மாநிலம் முழுதும் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அளித்த மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில போக்குவரத்து கமிஷனர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சார்பில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், சட்ட விரோதமாக வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவை அமல்படுத்தி, இரு வாரங்களில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.