தமிழக சுகாதார துறைக்கு ரூ.3,000 கோடி நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்
தமிழக சுகாதார துறைக்கு ரூ.3,000 கோடி நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்
தமிழக சுகாதார துறைக்கு ரூ.3,000 கோடி நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்
ADDED : ஜூலை 12, 2024 06:24 AM

சென்னை : தமிழக சுகாதார கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்து உள்ளது.
தமிழக சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கி உதவியுடன், சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாண்டு திட்டத்தில், 2,855 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கின்றன. இதில், 1,998.32 கோடி ரூபாய் உலக வங்கியும், 856.42 கோடி ரூபாய் மாநில அரசும் அளிக்கிறது.
கடந்த, 2019ல் இருந்து இதுவரை உலக வங்கியிடமிருந்து, 1,622 கோடி ரூபாய் பெறப்பட்டு, தொற்றா நோய், விபத்து சிகிச்சை, பேறுசார் மற்றும் குழந்தைகள் நல திட்டம், மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம், இந்தாண்டுடன் முடிவடையும் நிலையில் மீதமுள்ள, 376.46 கோடி ரூபாய் மற்றும் புதிய கட்டமைப்புகளுக்கு, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி கோரி, உலக வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி ஆகியோர், அமெரிக்கா சென்றுள்ளனர்.
வாஷிங்டனில் உள்ள உலக வங்கி தலைமை அலுவலத்தில், தெற்காசிய பிராந்திய துணை தலைவர் மார்டின் ரைசர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க, உலக வங்கி அதிகாரிகள் முன்வந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், மக்கள் நல்வாழ்வு துறை செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.