வைகைசெல்வனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
வைகைசெல்வனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
வைகைசெல்வனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
ADDED : ஜூலை 19, 2024 12:55 AM
சென்னை:முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனுக்கு எதிரான, தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, விருதுநகரில் இரவு 10:00 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனுக்கு எதிராக, வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வைகைசெல்வன் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, ''அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் ஆகியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை,'' என்றார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், ''இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. தாமதமாக தாக்கல் செய்ததால், அதை ஏற்கும்படி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், அதை ரத்து செய்ய நீதிபதி மறுத்து விட்டார். மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.