விலை நிர்ணயிக்கப்படாத இறால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்
விலை நிர்ணயிக்கப்படாத இறால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்
விலை நிர்ணயிக்கப்படாத இறால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூன் 17, 2024 12:36 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய உயர்ரக இறால் மீனுக்கு வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்யவில்லை. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
60 நாள்களுக்குப் பின் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நேற்று காலை கரை திரும்பினர். இதில் 90 சதவீதம் படகில் சராசரி 300 முதல் 350 கிலோ இறால் மீன்கள் சிக்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர்.
இந்த விலை உயர்ந்த இறால் மீனை தூத்துக்குடி ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். ஆனால் நேற்று வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து இறாலுக்கு விலை நிர்ணயிக்காமல், மீனவர்களிடம் முன்பணம் கொடுத்து இறாலை வாங்கி கொண்டு, ஓரிரு நாள்களுக்குப் பின் விலை சொல்வோம் என கூறியுள்ளனர். இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறுகையில் ''
மார்ச்சில் 30, 40, 50 என எண்ணிக்கையுள்ள ஒரு கிலோ இறால் தலா ரூ.650, 550, 450 க்கு விற்கப்பட்டது.
தற்போது 80 சதவீதம் படகில் சராசரி 40 எண்ணிக்கையில் ஒரு கிலோ இறால் சிக்கியது. உலக சந்தையில் இறாலுக்கு விலை நிர்ணயித்த நிலையில், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை சொல்லாமல் 3.20 லட்சம் கிலோ வாங்கியது சந்தேகம் அளிக்கிறது. இதனால் மீனவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே மத்திய, மாநில அரசு இறால் விலை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.