'பிரதமர் மோடி தெய்வப்பிறவி தேர்தல் விதியெல்லாம் தெரியாது'
'பிரதமர் மோடி தெய்வப்பிறவி தேர்தல் விதியெல்லாம் தெரியாது'
'பிரதமர் மோடி தெய்வப்பிறவி தேர்தல் விதியெல்லாம் தெரியாது'
ADDED : ஜூன் 01, 2024 04:37 AM

வேலுார் : ''பிரதமர் மோடி ஒரு தெய்வப்பிறவி; அவர் தேர்தல் விதியோ அரசியல் விமர்சகர்கள் கருத்தோ, காதில் வாங்கும் நிலையில் இல்லை'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார், காட்பாடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து அறிந்தேன். இது குறித்து, அரசியல் தெளிவு பெற்றவர்கள், கருத்து தெரிவித்துள்ள பெரும்பான்மையானோர், மோடியின் செயலை குறை கூறியுள்ளனர். காரணம் அவர், தியானம் செய்வது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஜூன் 1ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது, அந்த தேர்தலில் 'இம்பேக்ட்' ஏற்படுத்தக்கூடும். இது தேர்தல் விதியை மீறிய செயலாகும்.
ஓட்டு கேட்கும் போது மதத்தையோ, அதற்கான செய்கையையோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்து ஓட்டு கேட்கக்கூடாது என்பது உத்தரவு. ஆகவே, இதுபோன்று மக்களிடம் மறைமுகமாக பிரசாரம் செய்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர்.
எதையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை. காரணம் அவர் மனிதனாக இருந்தால் காதில் விழும்; அவர் தெய்வப்பிறவி. அதெல்லாம் அவருக்கு தெரியாது. தெய்வப்பிறவிக்கு உலகத்தில் ஆயிரம் வேலைகள் உண்டு. இதெல்லாம் காதில் விழுந்திருக்காது.
மேகதாது அணையை திட்டவட்டமாக கட்ட முடியாது என நான் சொல்கிறேன். தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், அவர்கள் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது. திட்டவட்டமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அணைகள் கட்ட, பல தடைகளை கடக்க வேண்டும். ஐந்து குழுக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த குழுக்கள் இதற்கு அனுமதி தர முடியாது என்று தான் சொல்வர். இது ஒரு அரசியல். கேரளா, கர்நாடகா மாநிலத்தில் எப்போதெல்லாம் அரசியல் கிளம்புகிறதோ, அப்போதெல்லாம் இது குறித்து பேசுவர். தேர்தலில் எல்லா கட்சியினரும் அவர்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவர். முடிவை எண்ணி பார்த்தால் தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.