Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சேலத்தில் எடுபடாத இ.பி.எஸ்., வியூகம்

சேலத்தில் எடுபடாத இ.பி.எஸ்., வியூகம்

சேலத்தில் எடுபடாத இ.பி.எஸ்., வியூகம்

சேலத்தில் எடுபடாத இ.பி.எஸ்., வியூகம்

ADDED : ஜூன் 05, 2024 02:14 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சேலம் : இ.பி.எஸ்.,ன், 'புதுமுக வேட்பாளர்' வியூகம் எடுபடாததால் அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் தொடர்ந்து, 2ம் முறை, அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல்களை பொறுத்தவரை, 20 ஆண்டுகளுக்கு மேலாக, சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க., ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில், 2011 தேர்தலில், 11 தொகுதிகள், 2016, 2021 தேர்தல்களில், 10 தொகுதிகளை, அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றின.

லோக்சபா தேர்தலில், 1999, 2009, 2014 ஆகியவற்றில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இதனால், அ.தி.மு.க.,வின் கோட்டையாக, சேலம் தொகுதி கருதப்பட்டது. எனவே, தி.மு.க.,வும், இத்தொகுதியில் போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி வந்தது.

ஆனால், 2019ல் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வராக இருந்து, இ.பி.எஸ்., சந்தித்த லோக்சபா தேர்தலில், சேலம் தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற்றது, அவருக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

பின் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சேலம் மாவட்டத்தில், 10 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், சேலம் லோக்சபா தொகுதியில், இம்முறை வெற்றியை எதிர்நோக்கி, அ.தி.மு.க.,வினர் காத்திருந்தனர்.

நீண்ட காலம் கட்சியில் இருப்பவர்களுக்கு, 'சீட்' கொடுத்தால் உட்கட்சி பூசல் எழும் என்பதால், புதுமுக வேட்பாளரை, இ.பி.எஸ்., அறிமுகப்படுத்தினார். இதற்கு, தி.மு.க.,வில் உள்ள உட்கட்சி பூசலும் சாதகமாக அமையும் என எதிர்பார்த்தார். ஆனால் சேலத்தில், அ.தி.மு.க., தற்போது தோல்வியை தழுவியுள்ளது.

காரணம் என்ன?


சேலத்தில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நீண்ட கால நிர்வாகிகள் உள்பட பலரும் சீட் கேட்க, புதுமுகம் விக்னேஷுக்கு சீட் கொடுத்தது பலவீனமாக பார்க்கப்பட்டது.

அவரது தந்தை, கான்ட்ராக்டர் என்பதால் பணம் செலவு செய்ய தயங்க மாட்டார் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், அவர் சிக்கனமாக செலவு செய்ய, கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

தி.மு.க., வழங்கியதை விட குறைவாக வழங்கினால் ஓட்டு கிடைக்காது என பலரும் அறிவுறுத்தியும் பணப்பட்டுவாடாவில் மாற்றம் இல்லை. இதனால் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலுக்கு முன்பே, 'தோல்வி' என, முடிவு தெரிந்துவிட்டது.

சேலம் லோக்சபா தொகுதியில் உள்ள இடைப்பாடி சட்டசபை தொகுதியை தவிர, அ.தி.மு.க.,வுக்கு மற்ற தொகுதிகளில் ஓட்டுகள் கைகொடுக்கவில்லை. 3 ஆண்டுகளாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் பெயரளவில், 'போஸ்' மட்டும் கொடுத்து வருவதால், அந்தந்த தொகுதிகளில் ஓட்டுகள் குறைந்தன.

அ.தி.மு.க.,வை தாக்கி, தி.மு.க., - பா.ம.க., வைத்த விமர்சனங்களும், அ.தி.மு.க., ஓட்டு வங்கியை குறைத்தது. தமிழகம் முழுதும் செல்ல வேண்டியிருந்ததால், சேலம் தொகுதியில் குறைந்த நாட்களே பழனிசாமி பிரசாரம் செய்தார், இதுவும் கட்சிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

வீடு 'வெறிச்'


பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ளார். அவர் நேற்று காலை, 'டிவி'யில் தேர்தல் முடிவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கட்சி நிர்வாகிகள் பலரிடமும் போன் மூலம் விவாதித்தார்.

மேலும் வீட்டுக்கு நிர்வாகிகள் யாரும் வரவேண்டாம் என அவர் கூறி விட்டதால், நெடுஞ்சாலை நகர் பகுதி வெறிச்சோடியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us