தனியார் மூலம் பஸ் ஊழியர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
தனியார் மூலம் பஸ் ஊழியர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
தனியார் மூலம் பஸ் ஊழியர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 20, 2024 02:06 AM
சென்னை:போக்குவரத்து கழகங்களில், தனியார் நிறுவனம் வாயிலாக, ஓட்டுனர், நடத்துனர் நியமனம் செய்வதற்கு, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசு போக்குவரத்து கழகங்களில், ஒட்டுனர்கள், நடத்துனர்கள் பணியிடங்கள், 20 சதவீதம் காலியாக உள்ளன. இதனால், தனியார் ஓட்டுனர், நடத்துனர்களை நியமித்து, பஸ்களை சீராக இயக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு, தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தின. இது, தற்காலிகமாக நடவடிக்கை என, அரசு சமாளித்தது.
இந்நிலையில் திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு ஆட்களை அனுப்பும் பணிக்கு, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க விளம்பரம் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார் கூறியதாவது:
நிரந்தர தன்மையுள்ள வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர் நியமனம் கூடாது என்ற சட்டம் இருக்கக்கூடாது. காலியிடங்களில் தனியார் நிறுவனம் வாயிலாக, பணியாளர் நியமனம் செய்வது, சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கை.
சமூக நீதியை பேசிவிட்டு, காலி பணியிடங்களை நிரப்பாமல், தனியார் நிறுவனம் வாயிலாக, பணியாளர்களை நியமனம் செய்வது சரியல்ல. இதை கண்டித்து, போராட்டங்களை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது:
திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில், ஓட்டுனர், நடத்துனராக, 365 நாட்களுக்கு மட்டும் பணிபுரிய, ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்து டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
ஒப்பந்த முறை வாயிலாக ஓட்டுனர், நடத்துனர் பணி நியமனம் செய்தால், ஒப்பந்ததாரர்கள் லாபம் பெறவும், முறைகேடு நடக்கவும் வாய்ப்பளிக்கும்.
எனவே, ஒப்பந்த முறை வாயிலாக, பணி நியமனம் செய்வதை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களை, நேரடி நியமனம் வாயிலாக பணிக்கு அமர்த்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.