ADDED : ஜூன் 24, 2024 12:55 AM

ஜூன் 24, 1928
கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்பள்ளியில், சுப்பிரமணியன் - நாராயண குட்டியம்மாள் தம்பதியின் மகனாக, 1928ல், இதே நாளில் பிறந்தவர், எம்.எஸ்.விஸ்வநாதன்.
இவர் தன், நான்காவது வயதில் தந்தையை இழந்து, தாத்தா வீட்டில் வளர்ந்தார். நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசையை கற்று, 13வது வயதில் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர், ஆர்.சுப்புராமனிடம் உதவியாளராக இருந்தார்.
சுப்புராமன் உடல்நலக்குறைவால் மறைய, அவர் ஒப்புக்கொண்ட, தேவதாஸ், சண்டிராணி, மணமகள் படங்களுக்கு, உதவியாளர் ராமமூர்த்தியுடன் இணைந்து, பாடல்களை முடித்து கொடுத்தார். பணம் படத்தில் இரட்டை இசையமைப்பாளராக அறிமுகமாயினர். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின், தனியாக இசையமைத்தார். இளையராஜாவுடன் இணைந்து இசைத்ததுடன், பல இசையமைப்பாளர்களிடமும் பாடினார்; சில படங்களில் நடித்தார்.
'செந்தமிழ் தேன்மொழியாள், காலங்களில் அவள் வசந்தம், மனிதன் என்பவன், பேசுவது கிளியா, விண்ணோடும் முகிலோடும்' உள்ளிட்ட தெவிட்டாத கானங்களுடன், 1,000 படங்களுக்கு மேல் இசைஅமைத்தார். 'இசைப்பேரறிஞர், கலைமாமணி' விருதுகளை பெற்ற இவர், தன், 87வது வயதில், 2015, ஜூலை 14ல் மறைந்தார்.
'தமிழ்த்தாய் வாழ்த்து'க்கு இசையமைத்த, மெல்லிசை மன்னர் பிறந்த தினம் இன்று!