குறைந்த வழிகாட்டி மதிப்பு ; பதிவுத்துறை புதிய முடிவு
குறைந்த வழிகாட்டி மதிப்பு ; பதிவுத்துறை புதிய முடிவு
குறைந்த வழிகாட்டி மதிப்பு ; பதிவுத்துறை புதிய முடிவு
ADDED : ஜூலை 16, 2024 11:27 PM

சென்னை,: குறைவான மதிப்பில் சொத்து விற்பனையை பத்திரப்பதிவு செய்ததால் ஏற்பட்ட இழப்பு தொகையை, விகிதாச்சார அடிப்படையில் வசூலிக்கும் பணிகளை, பதிவுத் துறை துவக்கி உள்ளது.
வழிகாட்டி மதிப்புக்கு குறைவாக, கிரைய பத்திரங்களை சிலர் தாக்கல் செய்கின்றனர். அதை மேல்முறையீட்டுக்கு அனுப்பாமல், சார் - பதிவாளர்களும் பதிவு செய்து கொடுக்கின்றனர்.
தணிக்கையின்போது, இந்த பத்திரங்கள் வாயிலாக ஏற்பட்ட வருவாய் இழப்பு கண்டுபிடிக்கப்படுகின்றன.
அதற்குள், அந்த சொத்து வாங்கியவர், வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விடுகிறார். இதனால், யாரிடம் இருந்து வேறுபாட்டு தொகையை வசூலிப்பது என்ற கேள்வி எழுகிறது.
அந்த குறிப்பிட்ட சொத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் வாங்கப்பட்ட நிலையில், வேறுபாட்டு தொகையை ஒட்டுமொத்தமாக ஒரே நபரிடம் வசூலிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வழிகாட்டி மதிப்புக்கு குறைவான மதிப்பில் பத்திரம் பதிவு செய்யப்பட்டால், இழப்பு தொகையை, உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் வாங்கப்பட்ட நிலையில், அவரவருக்கான நிலத்தின் அளவுக்கு ஏற்ப, இழப்பீட்டை பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு என்று பங்கிட்டு, அதற்கு ஏற்ப விகிதாச்சார முறையில் வசூலிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு, அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.