பள்ளிகளில் ஆய்வக நிர்வாக பணி; கேரள நிறுவனத்திடம் வழங்க முடிவு
பள்ளிகளில் ஆய்வக நிர்வாக பணி; கேரள நிறுவனத்திடம் வழங்க முடிவு
பள்ளிகளில் ஆய்வக நிர்வாக பணி; கேரள நிறுவனத்திடம் வழங்க முடிவு
ADDED : ஜூன் 03, 2024 06:10 AM

சென்னை : ஹைடெக் ஆய்வகங்களின் தொழில்நுட்ப நிர்வாகப் பணிக்கு, கேரள நிறுவனம் வழியே, 8,209 ஊழியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான சமக்ர சிக் ஷா இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது.
இந்த இயக்குனரகத்தின் கீழ் நடக்கும் பணிகள் பெரும்பாலும், தனியார் நிறுவனங்கள் வழியே மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வெளிப்படையான 'டெண்டர்' முறை பின்பற்றப்படாமல், அனுமதி கடிதங்கள் வழியே பணிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், மாநிலம் முழுதும், 22,931 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 8,209 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஹைடெக் ஆய்வகங்களின் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளவும், அதை நிர்வகிக்கவும், ஒரு ஆய்வகத்துக்கு தலா ஒரு நிர்வாக ஊழியர் நியமிக்கப்பட உள்ளார்.
இதற்காக, கேரள அரசு நிறுவனமான கேரள எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் என்ற கெல்ட்ரான் நிறுவனம் வழியே, 8,209 தொழில்நுட்ப நிர்வாக ஊழியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த பணிகளை தமிழகத்தில் எல்காட் மற்றும் அண்ணா பல்கலை வழியே, தமிழக இளைஞர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.