புது தாலுகா உருவாக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
புது தாலுகா உருவாக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
புது தாலுகா உருவாக்க வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 05, 2024 01:40 AM
மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் புது தாலுகா உருவாக்க தாக்கலான வழக்கில், மனுவை பரிசீலிக்க வாய்ப்புள்ளதா என தமிழக அரசிடம் விபரம் பெற்று அதன் தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அரிமளம் அண்ணாமலை தாக்கல் செய்த பொதுநல மனு:
அரிமளம் ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. திருமயம் தாலுகாவில் இடம் பெற்றுள்ளது. அரசின் திட்டங்கள், வாரிசு, வருமான சான்று பெற, பட்டா மாறுதலுக்கு அரிமளத்திலிருந்து திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு 20 கி.மீ.,பயணம் செய்ய வேண்டியுள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லை.
அரிமளத்தை தனி தாலுகாவாக உருவாக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நீண்டகாலமாக மேல் நடவடிக்கை இல்லை. கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தனர்.
அரசு தரப்பில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. தனி தாலுகாவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தமிழக தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுவை பரிசீலிக்க வாய்ப்புள்ளதா என அதிகாரிகளிடம் விபரம் பெற்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஜூலை 11ல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.