பனைமரங்களை பாதுகாக்க வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பனைமரங்களை பாதுகாக்க வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பனைமரங்களை பாதுகாக்க வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூன் 07, 2024 07:42 PM
மதுரை:பனைமரங்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் திமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
உடன்குடியில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. வேம்பார் பகுதியில் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமான பனைமரங்கள் ஏராளமாக அகற்றப்பட்டுள்ளன. பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகளை 100 சதவீத மானியத்தில் விவசாயிகள், ஊராட்சிகளுக்கு வினியோகிக்க 1 கோடி ரூபாய் ஒதுக்கி 2021ல் தமிழக வேளாண்துறை அரசாணை வெளியிட்டது.
மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அரசாணையில் உள்ளது. ஆனால், அதுபோல துாத்துக்குடி மாவட்டத்தில் குழு அமைக்க வில்லை. இதே நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. தற்போதுள்ள பனைமரங்களை கணக்கெடுத்து ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும். வெட்டப்படுவதை தடுக்க அரசாணை படி குழு அமைத்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை, வேளாண் உற்பத்தித்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு வருவாய் துறை செயலர், வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர், தோட்டக்கலைத்துறை இயக்குனர், நில நிர்வாக கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.