உயர்நீதிமன்ற மதுரை கிளை செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை செய்திகள்
ADDED : ஜூலை 18, 2024 11:36 PM
கோயிலை கையகப்படுத்த கோரி மனு: நீதிமன்றம் உத்தரவு
மதுரை,:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை முகிழ்த்தகத்தை சேர்ந்த பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:முகிழ்த்தகத்தில் 7 குடியிருப்புகள் உள்ளன. 5 குடியிருப்புகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் வசிக்கின்றனர். இப்பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அய்யனார், காளியம்மன் கோயில்கள் உள்ளன. 7 குடியிருப்புகளிலும் வரி வசூல் செய்து கோயில் திருவிழா நடத்தப்படும். 2019-ல் தேவேந்திர குல வேளாளர் குடியிருப்புகளில் வரி வசூல் செய்யாமல் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் விழா நடத்த முயன்றனர். திருவாடானை தாசில்தார் நடத்திய சமரசக்கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிராக மாற்று சமூகத்தை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் தேவேந்திரகுல வேளாளர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதால், கோயில் விழாவில் பங்கேற்க தடை கோரியிருந்தார். நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. தேவேந்திரகுல வேளாளர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை. எனவே கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்தி அனைத்து சமூகத்தினரையும் அனுமதித்து விழா நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் ராமமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தாசில்தார் தலைமையில் நடந்த சமரச கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்து திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
நீதிபதி சி.சரவணன் உத்தரவு: கோயிலில் ஜூலை 23 ல் அறநிலையத்துறை மேற்பார்வையில் திருவிழா நடக்கும். அதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அறநிலையத்துறை தாசில்தார், வருவாய் அதிகாரிகளின் உதவியை பெற வேண்டும். திருவிழா சுமூகமாக நடப்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும். இன்ஸ்பெக்டர், தாசில்தார் அறிக்கை பெற்று கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்துவது குறித்து அறநிலைய துறை ஆய்வு செய்ய வேண்டும்.
* சிண்டிகேட் உறுப்பினர்கள் பதவியை ரத்து செய்ய மனு
மதுரை லயோனல் அந்தோணி ராஜ் தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக செல்லத்துரை இருந்தபோது இணை பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் தகுதியற்ற பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்ட குழு விசாரித்து முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அடிப்படையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய தகுதியின்றி, விதிமுறை மீறி 42 உதவி பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பேராசிரியர்கள் தர்மராஜ், கண்ணன் ஆகியோரும் முறைகேடாக பதவி உயர்வு பெற்றவர்கள். அவர்கள் இருவரும் சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இருவரும் சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்து, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.