Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ யானையை வேட்டையாடி எரித்த விவகாரம் வனத்துறை அறிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி

யானையை வேட்டையாடி எரித்த விவகாரம் வனத்துறை அறிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி

யானையை வேட்டையாடி எரித்த விவகாரம் வனத்துறை அறிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி

யானையை வேட்டையாடி எரித்த விவகாரம் வனத்துறை அறிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி

ADDED : மார் 14, 2025 12:14 AM


Google News
சென்னை:தர்மபுரி அருகே யானையை வேட்டையாடி எரித்த விவகாரம் குறித்து, வனத்துறை தாக்கல் செய்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் என்ற இடத்தில், மார்ச் 1ம் தேதி யானை ஒன்று கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகம், -கர்நாடக எல்லையான இந்த பகுதியில், யானை தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு, அதுகுறித்த ஆதாரங்களை அழிக்கவே, யானை உடலில் தீவைத்து எரிக்கப்பட்டு உள்ளதாகவும், இவ்விவகாரம் குறித்து, மூன்று சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, இவ்விவகாரம் குறித்து வனத்துறை விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதை பார்த்த நீதிபதிகள், 'நீதிமன்றம் கோரிய விபரங்கள் அறிக்கையில் இல்லை. விசாரணை விவரங்கள் முழுமையாக இல்லை' என, அதிருப்தி தெரிவித்தனர்.

பின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரான தர்மபுரி மாவட்ட வன அதிகாரி ராஜாங்கம், ''யானை வேட்டையாடப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இதுவரை, நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான நபர்களில் ஒருவரிடம் இருந்து வெடிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது,'' என்றார்.

வனத்துறையின் அறிக்கை மற்றும் விளக்கத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், யானை வேட்டையாடப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வனத் துறை விரிவான விபரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us