ADDED : ஜூன் 25, 2024 01:35 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த கன மழையால் நீர்வரத்து 1048 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த அணை நீர்ப்பிடிப்பில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்கள் இடுக்கி மாவட்டத்தில் கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. கன மழை பெய்ததால் அணைக்கு 527 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 1048 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டமும் 117.95 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2258 மில்லியன் கன அடியாகும்.
பெரியாறில் 26.6 மி.மீ., தேக்கடியில் 25.2 மி.மீ., மழை பதிவானது. தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 511 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து கன மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.