சட்டசபைக்குள் குட்கா; ஸ்டாலினுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
சட்டசபைக்குள் குட்கா; ஸ்டாலினுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
சட்டசபைக்குள் குட்கா; ஸ்டாலினுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 06:30 AM
சென்னை : சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து, சட்டசபை செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்றதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. இதையடுத்து, தி.மு.க.,வினருக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து, சட்டசபை செயலர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், தீர்ப்புக்காக இந்த வழக்கு நேற்று பட்டியலிடப்பட்டது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை,'' என்றார்.
இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.