'தந்தது ஆறு; போட்டியிட்டது ஒன்று!' தேர்தல் போட்டி குறித்து பன்னீர்
'தந்தது ஆறு; போட்டியிட்டது ஒன்று!' தேர்தல் போட்டி குறித்து பன்னீர்
'தந்தது ஆறு; போட்டியிட்டது ஒன்று!' தேர்தல் போட்டி குறித்து பன்னீர்
ADDED : ஜூலை 28, 2024 05:42 AM

சென்னை: “லோக்சபா தேர்தலில், ஆறு தொகுதிகளை பா.ஜ., வழங்கியது. நம் ஆட்கள் தயங்கியதால், ஒரு தொகுதியில் மட்டும் நான் போட்டியிட்டேன்,” என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த, மாவட்ட ஆதரவு செயலர்கள் கூட்டத்தில் அவர் பேசியுள்ளதாவது:
கடந்த சட்டசபை தேர்தலின்போது, அ.ம.மு.க., வை கூட்டணியில் சேர்ப்போம் என, பழனிசாமியிடம் கூறினேன். நத்தம் விஸ்வநாதனும் இதை எடுத்துரைத்தார்; ஆனால், பழனிசாமி அதை ஏற்க மறுத்துவிட்டார்.
'அ.ம.மு.க.,வை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சேர்க்காமலேயே, 140 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என்றார் பழனிசாமி.
தயக்கம்
இதனால், ஜெயலலிதா நமக்கு கொடுத்துச் சென்ற ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்தோம். லோக்சபா தேர்தலில், ஒன்றிணைந்த அ.தி.மு.க.,வாக களம் இறங்குவோம் என்று சொல்லிப் பார்த்தோம். அதையும் ஏற்கவில்லை. இதனால் படுதோல்வியை சந்தித்தோம்.
அ.தி.மு.க., ஒன்றி ணைவதை பழனிசாமி விரும்பாததால், வேறு வழியின்றி, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழு சார்பிலும், தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவெடுத்த பின், அக்கூட்டணியில் நம் சார்பில் போட்டியிடுவதற்கு வசதியாக, 16 தொகுதிகள் கேட்டோம். அவர்கள் ஆறு தொகுதிகளை தர முன்வந்தனர்.
ஆனால், நம் தரப்பிலான ஆட்கள் போட்டியிட தயங்கினர். வேறு வழியின்றி ராமநாதபுரம் தொகுதியில் நான் மட்டும் களம் இறங்கினேன்.
மக்களும், தொண்டர்களும் நம் பக்கம் உள்ளனர். தனிக்கட்சி துவக்கும் எண்ணம் கிடையாது. அ.தி.மு.க.,தான் நம் கட்சி. விரைவில் ஒன்றிணைவோம். பழனிசாமி, கே.பி.முனுசாமி, உதயகுமார் என, ஒரு சிலர் மட்டும் அ.தி.மு.க., ஒன்றிணைய தடைக்கல்லாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
வாய்ப்பூட்டு
பின்னர் அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து பேச கட்சியினரை அழைத்து கூட்டம் போடுவதாக பழனிசாமி தெரிவித்தார். ஆனால், இணைப்பு குறித்து பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போட்டு விட்டார்.
“அ.தி.மு.க.,வில் இருந்து எங்களிடம் பலரும் பேசுகின்றனர். யார் பேசினர்; என்ன பேசினர் என்பதையெல்லாம் இப்போதைக்கு வெளியில் கூற இயலாது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கோபமாக பேசுவார். ஆனால், நல்ல மனிதர்; நல்ல கருத்தை கூறுவார்.
“கட்சி ஒன்றிணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற இயலாது என, அவர் கூறியுள்ளார். அவருடைய கருத்துதான், ஒட்டுமொத்த அ.தி.மு.க., தொண்டர்கள் கருத்து,” என்றார்.