UPDATED : ஜூலை 15, 2024 11:05 PM
ADDED : ஜூலை 15, 2024 08:33 PM

சென்னை: தமிழகத்தில் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம், 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மின் வாரியம், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கடந்த 2022 செப்., 10ல் மின் கட்டணம், 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2023 ஜூலை முதல், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கவில்லை.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான மின் கட்டணம், ஜூலை 1முதல் 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் விகிதம் விபரம்
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
400 யூனிட் வரை ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆக உயர்வு
401 -500 யூனிட் வரை ரூ. 6-15 லிருந்து ரூ.6.45 ஆக உயர்வு
501-600 யூனிட் வரை ரூ.8.15- ரூ.8.55 ஆக உயர்வு
601-800 யூனிட்வரை 9.20-9.65 ஆக உயர்வு
801-1000 யூனிட் வரை 10.20 -10.70 ஆக உயர்வு
1000 யூனிட்டிற்கு மேல் ரூ.11.25 - ரூ.11.80 ஆக உயர்வு
வணிக பயன்பாடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 வசூலிக்கப்படும். 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.27 வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.