ADDED : ஜூன் 17, 2024 10:10 PM

பந்தலூர்:நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது பென்னை 1-ம் நம்பர் பழங்குடியினகிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சென்னான் 65 என்பவர், மாலை 7 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளார்.
அப்போது குடியிருப்புகளுக்கு மத்தியில், ஒற்றைக் காட்டு யானை அவரை துரத்தி தாக்கியது. காயமடைந்த இவரை, பிதர்காடு வனக்குழுவினர் பந்தலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று பகல், மாறன் என்ற பழங்குடியின முதியவரை, இதே பகுதியை ஒட்டிய காரமூலா என்ற இடத்தில், யானை தாக்கியதில் பலத்த காயங்களுடன் ஊட்டி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றை யானை பழங்குடியினர்களை தாக்கி வருவது பழங்குடியின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் அந்த யானை நின்றிருப்பதால் வனச்சரகர் ரவி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.