3ம் பாலினத்தவருக்கு ஜாதி ரீதியாக இல்லாமல் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும்படி ஐகோர்ட் உத்தரவு
3ம் பாலினத்தவருக்கு ஜாதி ரீதியாக இல்லாமல் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும்படி ஐகோர்ட் உத்தரவு
3ம் பாலினத்தவருக்கு ஜாதி ரீதியாக இல்லாமல் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும்படி ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜூன் 03, 2024 07:31 AM
ADDED : ஜூன் 03, 2024 06:10 AM

சென்னை : மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ், இடஒதுக்கீடு வழங்கி, 2015ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக் ஷிதா ராஜ் தாக்கல் செய்த மனு:
அரசாணை
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 2015 ஏப்., 6ல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
அதில், 'மாநிலத்தில், மூன்றாம் பாலினத்தவர்கள், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
அவர்களை எம்.பி.சி., பட்டியலின் கீழ் கொண்டு வந்து, இடஒதுக்கீடு வழங்கினால், அவர்களின் அந்தஸ்து மேம்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 14ல், எந்தவிதமான பாகுபாடின்றி, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; பிரிவு - 15ல், மதம், இனம், சாதி, பாலினம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து, எவருக்கும் அரசு பாகுபாடு காட்டக்கூடாது; பிரிவு - 16ல், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்; பிரிவு - 21ல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையால், பட்டியலின சமூகத்தில் பிறந்த மூன்றாம் பாலினத்தவர் பாதிக்கப்படுவர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக மாநிலத்தில், மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாதிய ரீதியாக இல்லாமல், ஒரு சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு எதிராக, 2015ல் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.எஸ்.தன்வி ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் விஜய் ஆனந்த், ''மாநிலத்தில் எம்.பி.சி., பிரிவினருக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பட்டியலினத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள், எஸ்.சி., - எஸ்.டி., சான்றிதழ் வைத்திருந்தால், அவர்கள் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுவர் என, தெளிவு படுத்தும் வகையில், 2017 டிச., 22ல் மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
எந்த சான்றிதழும் இல்லாத மூன்றாம் பாலினத்தவர்கள், எம்.பி.சி.,யாக கருதப்படுவர்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சமூகம், கல்வியில் பின்தங்கிய வகுப்பாக மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
பாகுபாடு
ஒட்டுமொத்தமாக, அவர்களிடையே பாகுபாடு காட்டப்படுவதால், மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2015ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தன்னிச்சையானது; அரசியலமைப்பு சட்டப்பிரிவு களை மீறும் வகையில் உள்ளதால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கும் வகையில், மூன்றாம் பாலித்தனவர்களுக்கு, 12 வார காலத்துக்குள், ஜாதி ரீதியாக இல்லாமல் சிறப்பு ஒதுக்கீடு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.