Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 6 மாதங்களில் 1 லட்சம் போதை மாத்திரை தமிழகம் முழுதும் விற்ற கும்பல் பற்றி பகீர்

6 மாதங்களில் 1 லட்சம் போதை மாத்திரை தமிழகம் முழுதும் விற்ற கும்பல் பற்றி பகீர்

6 மாதங்களில் 1 லட்சம் போதை மாத்திரை தமிழகம் முழுதும் விற்ற கும்பல் பற்றி பகீர்

6 மாதங்களில் 1 லட்சம் போதை மாத்திரை தமிழகம் முழுதும் விற்ற கும்பல் பற்றி பகீர்

UPDATED : ஜூலை 07, 2024 04:37 AMADDED : ஜூலை 06, 2024 10:58 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை:தமிழகம் முழுதும் போதை கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், தடை செய்யப்பட்ட மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் வாயிலாக போதை ஏற்றும் பழக்கமும் இளைஞர்களிடம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்காக, பெரிய நெட்வொர்க் அமைத்து, தமிழகம் முழுதும் ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளது.

கோவை மாநகரில் சமீப காலமாக மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர்.

இதில், கடந்த மே மாதம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வலி நிவாரணி மற்றும் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக, கரும்புக்கடை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த நான்கு பேர் மற்றும் இவர்களுக்கு மாத்திரைகளை வினியோகித்த பிரவீன் ஷெட்டி, 36, என்பவரை கைது செய்தனர்.

இவர், கர்நாடகா மாநிலம், ஹூப்ளியை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த வசந்த் ஷெட்டி, 69, என்பவரின் மருந்துக்கடையில் பணிபுரிந்தார்.

வசந்த் ஷெட்டி, மும்பையை சேர்ந்த சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ராஜேஷ் வாயிலாக மாத்திரைகளை வாங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதிக விலையில் விற்பனை செய்தது தெரிந்தது.

வசந்த் ஷெட்டியை தனிப்படை போலீசார் தேடினர். அவர் தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் கூறியதாவது:

வசந்த் ஷெட்டியின் அறிவுறுத்தலின் படியே பிரவீன் ஷெட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வலி நிவாரணி மாத்திரைகளையும், ஒரு சில தடை செய்யப்பட்ட மாத்திரைகளையும் போதைக்காக விற்பனை செய்துள்ளார்.

வசந்த ஷெட்டி ஹூப்ளியில் மருந்து விற்பனை கடை, நிறுவனங்களை நடத்தி, அப்பகுதியில் தொழில் அதிபர் போல தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இந்த கும்பல் ஆறு மாதங்களில், 1 லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகளை தமிழகம் முழுதும் விற்பனை செய்துள்ளனர். இம்மாத்திரைகளின் விலை, 14 ரூபாய் தான்.

ஆனால், 60 ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. அதை இவர்கள், 300 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இவர்களுக்கு இம்மாத்திரைகளை வழங்கிய மும்பையை சேர்ந்த ராஜேஷ் என்பவரையும் தேடி வருகிறோம்.

வசந்த் ெஷட்டியை காவலில் எடுத்து விசாரித்த பின், இந்த விற்பனையில் வேறு யார், யாருக்கெல்லாம் பங்குள்ளது. மாவட்ட வாரியாக மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் குறித்த முழு பட்டியல் கிடைக்கும். அவர்களையும் விரைவில் கைது செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us