வாலிபர் உடல் உறுப்பு தானம் 6 பேருக்கு மறுவாழ்வு
வாலிபர் உடல் உறுப்பு தானம் 6 பேருக்கு மறுவாழ்வு
வாலிபர் உடல் உறுப்பு தானம் 6 பேருக்கு மறுவாழ்வு
ADDED : ஜூன் 07, 2024 02:04 AM
சென்னை,
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால், ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 20; கல்லுாரி மாணவர். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீட்டிற்கு திரும்பிய போது, டிராக்டர் மோதி விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
பின், இளைஞரின் உறவினர்கள், உடலை தானமளிக்க முன்வந்தனர். அதன்படி, இதயம், சிறுநீரகம், கண்கள், எலும்பு உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டு, ஆறு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு, மருத்துவமனைமுதல்வர் தேரணிராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் அரசு மரியாதை செலுத்தினர்.
மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
இளைஞரின் உடல் உறுப்பு தானத்தின் காரண மாக, ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். ஜனவரி முதல் இன்று வரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 20 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். துரதிருஷ்டமான சூழலிலும், உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளைஞரின் தந்தை ஏழுமலை கூறுகையில், ''இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணிந்திருந்தால், மகன் புவனேஸ்வரன் உயிருடன் இருந்திருப்பார். எனவே, வாகனம் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிவது அவசியம்,'' என்றார்.