Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தீ விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்தது

தீ விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்தது

தீ விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்தது

தீ விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்தது

ADDED : ஜூன் 03, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம், : விழுப்புரத்தில் வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியின் போது காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், 2 தீயணைப்பு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரம், மேல்தெரு சென்னை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 48; அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பியூட்டி பார்லர் உள்ளது. செந்தில்குமார் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி அனுராதா, மகன் ஷைலேஷ் ஆகியோருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3:45 மணிக்கு, மின்னழுத்தம் காரணமாக, வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், திடுக்கிட்டு எழுந்த செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி அலுவலர் சிவசங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வீட்டின் பக்கவாட்டு படிக்கட்டு வழியாக மாடிக்கு செல்ல முயன்றனர். அப்போது, வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சமையலறையில் சிலாப்கள் உடைந்து, சுவர் விரிசல் ஏற்பட்டது. வீடு முழுவதும் தீ பரவி புகைமூட்டமாக இருந்தது.

இதனால், உள்ளே செல்ல முயன்ற 2 தீயணைப்பு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதையடுத்து, தீயணைப்பு வீரர்கள், சமையல் அறையின் சுவரை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் மற்றும் பீரோவிலிருந்த நகை, பணம், வீடு, நில ஆவணங்கள் என 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.

தீ விபத்து குறித்து, விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us