கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு
கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு
கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூலை 18, 2024 10:59 PM
கர்நாடகா அணைகளிலிருந்து, 75,500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 35,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஆற்றில் பாறைகளை மூடி, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு, மடிக்கேரி, மைசூர், மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவில் உள்ள அனைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி மற்றும் நுகு அணை தன் முழு கொள்ளளவை எட்டியதால், அணைகளுக்கு வரும் உபரி நீர், அணை பாதுகாப்பு கருதி அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது. நேற்று மாலை கபினியில், வினாடிக்கு, 70,000 கன அடி, நுகு அணையில், 5,000, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 500 கன அடி என மொத்தம், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு, 75,500 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 10:00 மணிக்கு, 33,000 கன அடியாகவும், மாலை, 6:00 மணிக்கு, 35,000 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பாறைகளை மூடும் அளவிற்கு நீர்வரத்து அதிகரித்து, மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால், 3வது நாளாக காவிரியாற்றில், குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பாதை மூடப்பட்டு, போலீசார் மற்றும் வருவாய் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து பெய்யும் மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில், ஓரிரு நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது.
###ஒரே நாளில் 5 அடி உயர்வு####
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. இதனால், கடந்த மே 16ல், 50.16 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 17 ல், 49.95 அடியாக சரிந்தது. கடந்த, 3ல் நீர்மட்டம், 39.65 அடியாக சரிந்தது. அதன் பின்பு நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்ததால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு, 21,520 அடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 23,989 கனஅடியாகவும், மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 31,102 கனஅடியாகவும் உயர்ந்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம், 46.80 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று மாலை, 4:00 மணிக்கு, 51.38 அடியாகவும், 15.85 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 18.69 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் அணை நீர்மட்டம், 5 அடியும், நீர் இருப்பு, 3 டி.எம்.சி.,யும் அதிகரித்தது. வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
'###படகு, பரிசல் போக்குவரத்து நிறுத்தம்###
சேலம், மேட்டூர் வட்டத்தில் காவிரி கரையோரத்திலுள்ள பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டியில் இருந்து மறுகரையிலுள்ள தர்மபுரி மாவட்டம், நாகமறை, ஒட்டனுார், ஏமனுார் பகுதிக்கு பயணிகள் விசைப்படகு, பரிசல்கள் இயக்கப்படும். கர்நாடகாவின் கபினியில் திறக்கப்பட்ட உபரி நீர் காவிரியில் பெருக்கெடுத்து வருவதால், மூன்று பகுதிகளிலும் காவிரியாற்றில் இயக்கப்பட்ட பயணிகள் விசைப்படகு, பரிசல்கள் இரு நாட்களாக நிறுத்தப்பட்டது. நீர்வரத்து கூடுதலாக இருப்பதால், மீனவர்களும் பரிசல்களில் மீன்பிடிக்க செல்லவில்லை. பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சேலம், தர்மபுரி காவிரி கரையோரம் வசிக்கும் கிராம மக்கள், பஸ்சில் மேச்சேரி வழியாக சுற்றி மேட்டூர், கொளத்துார் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
16 கண் மதகு சீரமைப்பு
மேட்டூர் அணை நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருவதால், அதற்கேற்ப நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணை நிரம்பி, 120 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படும். அதற்காக நீர்வளத்துறை ஊழியர்கள், 16 கண் மதகு ஷட்டர்களை இயக்கியும், பாலத்தில் உள்ள கம்பங்களில் பொருத்தியுள்ள மின் விளக்குகளை புதுப்பித்து சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-நமது நிருபர் குழு-