Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை

தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை

தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை

தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை

ADDED : மார் 28, 2025 05:35 AM


Google News
திருச்சுழி : தேங்கும் கழிவுநீர், ஒழுகும் குடிநீர் தொட்டி, திறந்த வெளி கழிப்பறை உட்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திருச்சுழி அருகே இரைச் சின்னம்பட்டி மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆர்.கல்லுமடம் ஊராட்சிக்கு உட்பட்டது இரைச்சின்னம்பட்டி. இங்கு 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. ஊருக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லை. எம்.ரெட்டியபட்டியில் இருந்து 2 கி.மீ., தூரம் உள்ள ஊருக்கு நடந்து தான் வர வேண்டி உள்ளது. இங்கிருந்து பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள ஊருக்கு நடந்து சென்று தான் படிக்கின்றனர். ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் முறையாக வருவது இல்லை.

புழக்கத்திற்கு போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் தொட்டி கட்டி வைத்துள்ளனர். இது ஓட்டையாகி விட்டதால் தண்ணீர் முழுவதும் வெளியேறி விடுகிறது. ஊரில் அங்கன்வாடி மையம் இல்லாததால் அருகில் உள்ள கல்லுமடத்தில் இருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது.

ஊரிலிருந்து 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்கின்றனர். குழந்தைகளை அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துள்ளனர்.

ஊரில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை. வாறுகால்கள் சேதம் அடைந்து கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. ரோடும் பல பகுதிகளில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. ஊரில் பொது கழிப்பறை இல்லாததால் பெண்கள் ரோடு ஓரங்களை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குளியல் தொட்டி தெரு விளக்குகள் வேண்டும். ரோடு ஓரங்களில் உள்ள மெயின் வாறுகால் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி கிடக்கிறது.

அங்கன்வாடி மையம் வேண்டும்


சுபலட்சுமி, குடும்பதலைவி: இரைச்சின்னம்பட்டியில் 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று கல்லுமடம் அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் கூலி வேலை செய்வதால் அவர்களுடைய பணி கெடுகிறது. ஊரில் அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஊரில் மையம் இருப்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்ல யோசிக்கின்றனர்.

கழிப்பறை இல்லை


பாப்பம்மாள், குடும்பதலைவி: ஊரில் கழிப்பறை இல்லாமல் பெண்கள் சிரமப்படுகின்றனர். மெயின் ரோட்டை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு அடிக்கடி வாகனங்கள் வந்து செல்வதால் அங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஊரில் ஆண், பெண் இருபாலருக்கும் நவீன சுகாதார வளாகம் கட்டித்தர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் இல்லை


முனியசெல்வம், குடும்பதலைவி: இரைச்சின்னம்பட்டியில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை இல்லை. குடிநீர் இல்லை. வாறுகால்கள் ரோடுகள் மோசம். அத்தியாவசிய வசதிகள் கேட்டு பலமுறை ஊராட்சியிடம் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. புறக்கணிக்கப்பட்ட பகுதியாக எங்கள் ஊர் உள்ளது. ஊரில் அவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us