Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை நன்கொடை

அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை நன்கொடை

அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை நன்கொடை

அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை நன்கொடை

ADDED : ஜூன் 28, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை: தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் உள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷன் செல்வ விநாயகர் கோயிலுக்கு பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா, நடிகை திரிஷா உள்ளிட்டோர் சார்பில் 6 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட கஜா என்ற இயந்திர யானை வழங்கப்பட்டது.

அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்ட லிங்க ஆதிசேஷன் செல்வ விநாயகர் கோயிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயிலுக்கு யானை வாங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து யானை ஆசி வழங்குவது போல் சிலை வைக்க முடிவு செய்தனர்.இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' அமைப்பை அணுகினர். அந்த அமைப்பு, நடிகை திரிஷா மற்றும் சிலர் சேர்ந்து ரூ. 6 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட கஜா என்ற இயந்திர யானையை கோயிலுக்கு வழங்கினர்.

இதுகுறித்து பீப்பிள்ஸ் பார் கேட்டில் இன் இந்தியா நிறுவனர் அருண்பிரசாத் கூறியது:

3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடை உள்ள இந்த இயந்திர யானையை கேரளாவில் உள்ள சாலக்குடியில் 4 இளைஞர்கள் உருவாக்கினர். சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும். காதுகள், துதிக்கை, தலை அசையும் வகையில் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் மீது தண்ணீர் பீச்சியடிக்கும் அமைப்பும் உள்ளது. மின்சாரத்திலும், பேட்டரியிலும் இயங்கும். முழுவதும் ரப்பர், சிலிக்கான் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்க கேட்டபோது அரசிடம் இருந்து முறையான பதில் இல்லை.

இந்த கோயில் நிர்வாகிகள் கேட்டதால் இயந்திர யானையை தமிழகத்தில் முதல்முறையாக இங்கு வழங்கியுள்ளோம். யானை இல்லாத மேலும் பல கோயில்களுக்கு இதுபோன்று இயந்திர யானை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

நடிகை திரிஷா எங்கள் அமைப்பின் ஸ்பான்சர் ஆக உள்ளார், என்றார்.

இயந்திர யானை அறிமுக விழா நேற்று நடந்தது. ஏ.எஸ்.பி., மதிவாணன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டனர். மக்கள் மலர் தூவி யானையை வரவேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us