ADDED : பிப் 06, 2024 12:09 AM

சேத்துார், : நெல் அறுவடை வேகம் எடுத்து வரும் நிலையில் வைக்கோலுக்கு பாதிக்கும் குறைவான விலை நிர்ணயிப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சேத்துார் அடுத்த வடக்கு, தெற்கு தேவதானம், கோவிலுார் கிராம பகுதிகளில் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கத்தை ஆதாரமாக வைத்து பெரியகுளம், நகர குளம், வாண்டையார்குளம் கண்மாய்களின் பாசன பகுதிகளில் 1500 ஏக்கர் நெல் விவசாயம் நடைபெறுகிறது.
15 நாட்களாக நெல் மகசூல் நிலையை அடைந்ததால் அறுவடை பணிகள் வேகம் எடுத்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் உள்ளூர் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயிக்கின்றனர்.
அறுவடை துவங்கிய நேரத்தில் வைக்கோல் ஏக்கருக்கு ரூ.4000 விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது ரூ. 1000 முதல் 1500 வரை மட்டுமே வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் ஏக்கருக்கு ரூ. 3000 வரை இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் வேதனையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி தவசி கூறுகையில், நெல் விளைச்சலை பார்த்து வியாபாரிகள் வைக்கோலுக்கு விலை நிர்ணயிக்கின்றனர். அவர்கள் பொறுப்பிலேயே வண்டி அமர்த்தி கட்டுகளாக கட்டி கொண்டு செல்வதால் எங்களுக்கு பணிகள் மிச்சம்.
தொடக்கத்தில் ரூ. 4000 வரை நிர்ணயித்த விலை ஈரநிலம், மண்ணில் சாய்ந்த நெற்கதிர்கள், அறுவடைக்கு முன் சாரல் மழையால் வைக்கோலின்நிறமாற்றம் போன்ற காரணங்களை கூறி ஏக்கருக்கு ரூ.1000 முதல் 1500 வரை மட்டுமே விலை வைக்கின்றனர். வைக்கோலுக்கு உரிய விலை கிடைப்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.