Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி, இருவர் படுகாயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி, இருவர் படுகாயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி, இருவர் படுகாயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் பலி, இருவர் படுகாயம்

ADDED : ஜூன் 12, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், மூவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர்.

காரியாபட்டி வடகரையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கும், நாக்பூர் உரிமம் பெற்ற 30 அறைகளுடன் கூடிய பட்டாசு ஆலை உள்ளது.

நேற்று காலை 8:30 மணிக்கு பணியாளர்கள் பணியை துவக்கினர். மருந்து தயார் செய்யும் பணியில் தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பையா, 38, கணேசன் 50, ஈடுபட்டிருந்தனர்.

மருந்தை எடுக்க, கல்குறிச்சியைச் சேர்ந்த சவுண்டம்மாள், 54, தண்டியனேந்தலை சேர்ந்த முருகன், 45, பேச்சியம்மாள், 40, மருந்து தயார் செய்யும் அறைக்கு வந்தனர். 9:00 மணிக்கு மருந்தில் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அறை முற்றிலும் தரைமட்டமானது.

இதில் கருப்பையா, சவுண்டம்மாள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரண்டு கால்களும் துண்டான முருகன் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையிலும், கணேசன், பேச்சியம்மாள் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

கணேசன் பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆனது.

அறை வெடித்து சிதறிய போது, வெளியே நடமாடிய அச்சங்குளத்தைச் சேர்ந்த மாரியம்மாள், தோணுகாலைச் சேர்ந்த காமாட்சிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்தால், ஒரு அறை மட்டும் தரைமட்டமானது. மற்ற அறைகள் தப்பின. காரியாபட்டி தீயணைப்பு வீரர்கள் சிதறிய உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தோணுகாலைச் சேர்ந்த ஆலை மேலாளர் கனி முருகன், கல்குறிச்சியைச் சேர்ந்த போர்மேன் வீரசேகரனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இறந்த மூவருக்கும் தமிழக அரசு சார்பில் தலா, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us