ADDED : ஜன 11, 2024 04:33 AM
விருதுநகர் : ராஜபாளையம் அழகுராஜ், ஸ்ரீவில்லிபுத்துார் சுரேஷ்குமார் ஆகியோர் தென்மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயருக்கு அனுப்பிய மனு:
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் டவுன், ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் பார் திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் உரிமம் வழங்கியது.
இந்த உரிமத்தை வைத்து கொண்டு அனைத்து டாஸ்மாக் பாரின் அருகில் 24 மணி நேரமும் போலி மதுபான விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. அதாவது மூடி திறந்த நிலையில் மதுபானம் வழங்குகின்றனர்.
இரவு 10:00 மணி முதல் மறுநாள் மதியம் 12:00 மணி வரை பாட்டில்களுக்கு ரூ.100 வீதம் கூடுதல் விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் நகர்ப்பகுதிகள், குன்னுார், கிருஷ்ணன்கோவில், சுந்தரபாண்டியம், டி.மானகசேரி, கோட்டையூர், வலையங்குளம், வத்திராயிருப்பு, கூமாபட்டி, படிக்காசு வைத்தான்பட்டி, மொட்டமலை, தளவாய்புரம், கீழராஜகுலராமன், சேத்துார் ஆகிய பகுதிகளில் 24 மணி நேர போலி மது விற்பனை பிரச்னை அதிகம் உள்ளது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுள்ளனர்.