Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவ கல்லுாரியாக தரம் உயருமா

சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவ கல்லுாரியாக தரம் உயருமா

சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவ கல்லுாரியாக தரம் உயருமா

சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவ கல்லுாரியாக தரம் உயருமா

ADDED : மார் 15, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: சிவகாசி அரசு காப்புறுதி தொழிலாளர் (இ.எஸ்.ஐ.,) மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ள நிலையில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பட்சத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பயனடைவர். எனவே விரைவில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி ஆனையூரில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை 1987ல் 50 படுக்கை வசதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2000ல் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

இங்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 300 க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 50 பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மருத்துவ சேவை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குடும்ப நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவம் ஆகியவை சிறப்பு டாக்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ வசதியும் உள்ளது.

மேலும் உயர் ரக ரத்தப் பரிசோதனை கருவிகள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, அல்ட்ரா சோனோகிராம், இசிஜி, லேப்ராஸ்கோப்பி உள்ளன.

ஆஞ்சியோகிராபிக், ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வளவு வசதிகள் இருந்தும், கட்டடம் கட்டப்பட்டு 36 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது அனைத்து இடங்களிலும் கட்டடம் சேதமடைந்துள்ளது.

ஆங்காங்கே சுவற்றில் விரிசல் ஏற்பட்டு சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கின்றது. மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து கட்டடத்தில் உள்ளேயும் இறங்குகின்றது. மூன்று தளம் கொண்ட மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக லிப்ட் செயல்படவே இல்லை. இதனால் சிகிச்சைக்காக வருகின்ற வயதானவர்கள், காயமடைந்தவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

உள் நோயாளிகளுக்காக படுக்கைகள் இடவசதி இல்லாமல் நெருக்கமாக அமைக்கப்பட்டது.

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், செவிலியர் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையின் வளாகத்தில் போடப்பட்டுள்ள ரோட்டில் கற்கள் பெயர்ந்து நோயாளிகளின் கால்களை பதம் பார்க்கிறது.

இவ்வளவு பிரச்னைகள் தள்ளாடும் மருத்துவமனையை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டிற்கு முன்பு சிவகாசியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நல திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். மேலும் அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இந்த மருத்துவமனையை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us