/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.1500 லஞ்சம் உணவு பாதுகாப்பு அலுவலர் கைது பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.1500 லஞ்சம் உணவு பாதுகாப்பு அலுவலர் கைது
பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.1500 லஞ்சம் உணவு பாதுகாப்பு அலுவலர் கைது
பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.1500 லஞ்சம் உணவு பாதுகாப்பு அலுவலர் கைது
பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.1500 லஞ்சம் உணவு பாதுகாப்பு அலுவலர் கைது
ADDED : ஜூலை 11, 2024 11:00 PM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் உணவு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்க பெட்டி கடைக்காரரிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய அந்நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சந்திரசேகரன் 58, கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் குருசாமி, 48. இவரது கடையில் ஜூன் 16ல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சந்திரசேகரன், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை செய்தார். அப்போது கடைக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் இல்லை என்பது தெரியவந்தது.
அவரிடம் அச்சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, சந்திரசேகரன் ரூ. 7500 லஞ்சம் கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு கொடுக்க முடியாது என குருசாமி கூறிய நிலையில் ரூ. 3500 கேட்டுள்ளார். அதற்கும் குருசாமி தர மறுத்த நிலையில் கடைசியாக ரூ. 1500 லஞ்சமாக சந்திரசேகரன் கேட்டுள்ளார். சான்றிதழை பெற ஆதார் உட்பட பல்வேறு ஆவணங்களை குருசாமியிடமிருந்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத குருசாமி , விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஜூலை 3 ல் புகார் அளித்தார். அன்றைய தினமே வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். ஆனால் அன்று பணத்தை வாங்காமல் சந்திரசேகரன் அலைக்கழித்துள்ளார்.
நேற்று மதியம் 1:00 மணிக்கு குருசாமியை தொடர்பு கொண்ட சந்திரசேகரன், கடைக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி தனது டூவீலரில் பெட்டிக்கடைக்கு சென்று ரூ.1500 வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சால்வன்துரை தலைமையிலான போலீசார் சந்திரசேகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரது டூவீலரில் இருந்த கணக்கில் வராத ரூ.10,500 , ஒரு குவாட்டர் மது பாட்டிலையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரித்தனர்.
4 மாதத்தில் இருவர் கைது
ஏப். 26ல் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வாசுதேவன் என்பவர் வீடு கட்ட பிளான் அப்ரூவல் வழங்க , இதே ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர அமைப்பு அலுவலர் ஜோதிமணி, ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். நான்கு மாத இடைவெளியில் தற்போது உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.