Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

ADDED : செப் 14, 2025 08:12 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : விவசாய நிலத்தில் பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டது.

விழுப்புரம் அருகே அயினம்பாளையம் கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் நேற்று கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, பல்லவர் காலத்தை சேர்ந்த விஷ்ணு சிற்பம் ஒன்று அப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

அயினம்பாளையம் கிராமத்தில் விளைநில பகுதியில் மரங்கள் அடர்ந்த இடத்தில் விஷ்ணு சிற்பம் காணப்படுகிறது. சுமார் 3 அடி உயரமுள்ள பலகை கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு நின்ற நிலையில் காட்சி தருகிறார்.

அவரது பின்னிரண்டு கரங்கள் சங்கு சக்கரம் ஏந்தியும், முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையிலும், இடது கரம் இடுப்பின் மீது வைத்தும் காணப்படுகின்றன. அழகிய தலை அலங்காரம், ஆடை அலங்காரத்துடனும், பல்லவர் கால கலை நயத்துடனும் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சிற்பம் தற்போது வழிபாட்டில் இல்லை.

இந்த விஷ்ணு சிற்பத்தின் காலம் கி.பி., 8ம் நூற்றாண்டாகும். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் வைணவக்கோயில் இருந்து மறைந்திருக்க வேண்டும்.

இதே கிராமத்தில் பல்லவர் கால மூத்ததேவி சிற்பமும் உள்ளது. விளைநில பகுதிகளில் பழங்கால பானை ஓடுகளும் காணப்படுகின்றன.

இவை அயினம்பாளையம் கிராம தொன்மையை தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில், ஏற்கனவே தடுத்தாட்கொண்டூர், வன்னிப்பேர், நாரேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்லவர் கால விஷ்ணு சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் இப்பகுதியில் வைணவம் ஏற்றம் பெற்றிருந்ததை, இத்தகைய தனித்த சிற்பங்கள் உணர்த்துகின்றன. அயினம்பாளையம் விஷ்ணு சிற்பத்தை பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us