Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மழை நீரில் அழுகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை: அரசு நிவாரணத் தொகை வழங்க எதிர்பார்ப்பு

மழை நீரில் அழுகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை: அரசு நிவாரணத் தொகை வழங்க எதிர்பார்ப்பு

மழை நீரில் அழுகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை: அரசு நிவாரணத் தொகை வழங்க எதிர்பார்ப்பு

மழை நீரில் அழுகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை: அரசு நிவாரணத் தொகை வழங்க எதிர்பார்ப்பு

ADDED : ஜன 12, 2024 12:03 AM


Google News
Latest Tamil News
வானுார்: கிளியனுார் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி நள்ளிரவு முதல் 8ம் தேதி வரை பலத்த மழை பெய்தது. குறிப்பாக மரக்காணம், வானுார் தாலுக்காக்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழையில், வானுார் பகுதியில் 18 செ.மீ., மழை பதிவானது.

இதன் காரணமாக வானுார் மற்றும் கிளியனுார் சுற்று வட்டார பகுதிகளில் இருந்த ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்ததோடு, உபரி நீர் முழுதும், வெளியேறி, கழுவெளியை நோக்கி பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கழுவெளி பகுதியையொட்டி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கதிர் விட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

குறிப்பாக கிளியனுார், உப்புவேலுார், எடச்சேரி, கொஞ்சிமங்கலம், காரட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களுக்கு முன் 5,000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.

இந்த நெற்பயிர்கள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அறுவடை செய்யும் வகையில், கதிர்கள் நன்கு வளர்ந்திருந்தன.

ஆனால், கன மழையில், பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதால், அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக நெற்பயிர்களில் தேங்கியுள்ள மழைநீர் இதுவரை வடியாத நிலையில் நெற்கதிர்கள் அழுகி வீணாகி வருகின்றன. பல இடங்களில் நெற்கதிர்கள் முளைப்பு விட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது பயிரை காப்பாற்ற முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து கிளியனுார் பகுதி விவசாயிகள் கூறுகையில், '2000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் மழைநீரில் அழிந்து போயின.

கடந்த 10 தினங்களுக்கு முன் சவுக்கையில் ஊடு பயிராக உளுந்து பயிர் செய்தோம். அதுவும் மழையில் அடித்துச் சென்று விட்டது. ஒட்டுமொத்தத்தில் எங்களுக்கு இந்தாண்டு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து விட்டுச் சென்றுள்ளனர். இதுவரை நிவாரணத்தொகை அறிவிக்கவில்லை. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் போதுமான அளவில் நிவாரணத் தொகை அரசு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us