/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலையோரம் வீசப்படும் மருத்துவக் கழிவுகள்; விழுப்புரத்தில் நோய் பரவும் அபாயம் சாலையோரம் வீசப்படும் மருத்துவக் கழிவுகள்; விழுப்புரத்தில் நோய் பரவும் அபாயம்
சாலையோரம் வீசப்படும் மருத்துவக் கழிவுகள்; விழுப்புரத்தில் நோய் பரவும் அபாயம்
சாலையோரம் வீசப்படும் மருத்துவக் கழிவுகள்; விழுப்புரத்தில் நோய் பரவும் அபாயம்
சாலையோரம் வீசப்படும் மருத்துவக் கழிவுகள்; விழுப்புரத்தில் நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 17, 2024 06:39 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட எல்லீஸ் சத்திரம் மெயின் ரோட்டில், வழுதரெட்டி ஏரி பகுதியையொட்டி, சாலையோரமாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் தற்போது மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விழுப்புரம் நகர பகுதியில் உள்ள ஒரு சில தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை, இந்த பகுதியில் சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.
ஏற்கனவே சாலையோரமாக குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது குறித்து, நகராட்சியில் புகார் தெரிவித்ததால், இடையே நிறுத்தி இருந்தனர்.
தற்போது குப்பைகளுடன் மருத்துவமனை மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டைகளாக கொட்டுகின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, இந்த வழியாக செல்லும் மாணவர்கள், சிறார்கள் அந்த குப்பையில் உள்ள சிரஞ்சுகள், பிளாஸ்டிக் குழல்கள் போன்றவற்றை எடுத்து பயன்படுத்தும் ஆபத்தான நிலை தொடர்ந்து வருகிறது.கால்நடைகளும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால், இப்பகுதியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதே போல் விராட்டிக்குப்பம் சாலை, சாலாமேடு பகுதி ஏரிக்கரை பகுதி போன்ற இடங்களிலும் இதுபோன்று மருத்துவக் கழிவுகளை கொட்டுகின்றனர்.
இதுபோன்ற மருத்துவக் கழிவுகளை பத்திரமாக வைத்திருந்து, அதனை அகற்றுவதற்கு உரிய கழிவுகள் வாங்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அந்த கழிவுகளை, தற்போது விழுப்புரத்தில் உள்ள சிலர் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் முறையாக அகற்றாமல், நகராட்சியின் தற்காலிக துப்புரவு பணியாளர் மூலம் வழங்கி, இதுபோல் வழக்கமாக குப்பை கொட்டும் இடங்களில் கொட்டி வருகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நுண்ணுர மையம் போன்றவற்றில் இந்த கழிவுகள் வாங்கப்படாததால், இது போன்ற குப்பைகள், கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. விழுப்புரம் நகரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, இதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.