ADDED : ஜூன் 13, 2024 06:59 AM
ப.வேலுார் : ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் இயற்கை உரம் தயாரித்து, விற்பனையை துவக்கி உள்ளது. இதனை தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, செயல் அலுவலர் திருநாவுக்கரசு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, 18 வார்டுகளிலும் வீடு, கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. விவசாயத்தில் ரசாயன பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இயற்கை உர பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்க, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அளவில் சேகரிக்கப்படும், தரம் பிரிக்கப்பட்ட குப்பை கழிவிலிருந்து, இயற்கை உரம் தயாரித்து அதை, 'செழிப்பு' என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
வெறுமனே உரமாக வழங்காமல், மண் வளத்தை மேம்படுத்தும் தழை, மணி, சாம்பல் சத்து ஆகிய முன்னோட்டங்களை சேர்த்து இயற்கை உரமாக மாற்றி வழங்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல்படி விவசாயிகளுக்கு முழு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், உர தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். அவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இயற்கை உரம் ஒரு கிலோ, 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேவைப்படும் பொதுமக்கள், விவசாயிகள் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்று
பயனடையலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.