Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இயற்கை எரிசக்தியை 50 சதவீதம் பயன்படுத்த இலக்கு திருச்சி கல்லுாரி விழாவில் கவர்னர் ரவி பேச்சு

இயற்கை எரிசக்தியை 50 சதவீதம் பயன்படுத்த இலக்கு திருச்சி கல்லுாரி விழாவில் கவர்னர் ரவி பேச்சு

இயற்கை எரிசக்தியை 50 சதவீதம் பயன்படுத்த இலக்கு திருச்சி கல்லுாரி விழாவில் கவர்னர் ரவி பேச்சு

இயற்கை எரிசக்தியை 50 சதவீதம் பயன்படுத்த இலக்கு திருச்சி கல்லுாரி விழாவில் கவர்னர் ரவி பேச்சு

ADDED : பிப் 11, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
திருச்சி:திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லுாரியின், 25வது ஆண்டு விழாவில், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராக மகாதேசிக சுவாமிகள் மற்றும் தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, வெள்ளி விழா மலரை வெளியிட்டனர்.

இலக்கு


விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

பாரதம் என்பது சாதாரணமான ஒன்றல்ல;-- உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மக்கள் தொகை நிறைந்த நாடாக மட்டுமே இருந்தது.

தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு, நம் நாடு தீர்வை தருமா என்று, பல நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.

இயற்கை பேரிடர், கொரோனோ பரவல் மற்றும் பல நாடுகளுக்கு இடையேயான போர் போன்ற நெருக்கடியான நிலைகளிலும்,- பொருளாதார ஏற்றத்தாழ்வு, ராணுவப்படை பலத்தில் முரண்பாடுகளை எல்லாம் கடந்து, கண்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து நம் நாட்டில், ஜி - 20 மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டி இருக்கிறோம்.

அனைவரையும் ஒருங்கிணைத்து காட்டியது தான், பாரதிய சனாதனத்தின் மதிப்பு. கொரோனா காலக்கட்டத்தில், இக்கட்டான சூழ்நிலையில், ஊசி மருந்துகள் கிடைக்காமல் எத்தனையோ நாடுகள் போராடின.

ஆனால், நம் விஞ்ஞானிகள் சரியான நேரத்தில், ஏழை, எளிய மக்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்கும் வகையில், ஊசி மருந்துகளை தயாரித்து வழங்கினர். மேலும், 150 நாடுகளுக்கு ஊசியை பகிர்ந்து கொடுத்தோம்.

தட்ப வெட்ப நிலை மாற்றங்கள், உலகிற்கு பெரிய சவாலை கொடுத்து வருகின்றன. நம் நாட்டில், இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, இயற்கை முறையான, 'கிரீன் எனர்ஜி' வாயிலாக நம் தேவையை, நாமே பூர்த்தி செய்வதற்கான திட்டமிடலை உருவாக்கி வருகிறோம்.

அதன்படி, 2030ம் ஆண்டுக்குள், 50 சதவீதம் இயற்கை எரி சக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சூரிய சக்தியின் வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் அருமை யாருக்கும் புரியவில்லை.

2020ல் பிரதமர் கொண்டு வந்த சர்வதேச சூரிய சக்தி நிறுவனம், 120 நாடுகளுக்கு சென்று இருக்கிறது. 2016ல் சூரிய சக்தி மின் உற்பத்தி, 2 ஜிகா வாட்டாக இருந்து; தற்போது, 70 ஜிகா வாட்டாக உயர்ந்து உள்ளது.

மறுமலர்ச்சி


கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் இருந்த வறுமை, படிப்பறிவு, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் மாற்றம் பெற்றுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய கல்லுாரியில் நடந்த விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:

நம் நாடு, அனைத்து துறைகளிலும் விரிவான மறுமலர்ச்சியை அடைந்து வருகிறது. அதில், விளையாட்டு துறை மட்டும் விதிவிலக்கு.

நம் நாட்டு வீரர்கள், விளையாட்டில் பதக்கம் வென்றால், அவர்களுக்கு 1 கோடி, 2 கோடி என பரிசு வழங்குவதில் போட்டியிடும் அரசு, விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் போன்றவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை.

விளையாட்டு வீரர்கள் தேசிய சொத்து; அவர்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். விளையாட்டு, தேசத்தின் பெருமைக்கு மட்டுமின்றி தேசத்தின் நலனுக்கும் முக்கியமானது.

விளையாட்டில் போட்டியிடுபவர்கள், சமூகத்திற்கும் பங்களிப்பாக இருக்கின்றனர். எனவே, விளையாட்டை தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us