ADDED : ஜூன் 05, 2025 01:01 AM

திருப்பூர்:சி.ஏ.ஐ., எனப்படும் இந்திய பருத்தி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அக்., 1 முதல், இந்தாண்டு ஜூன் 3 வரை, 276 லட்சம் பேல் (ஒரு பேல் என்பது, 170 கிலோ) பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. சீசன் துவக்கத்தில், 2 லட்சம் பேல்களாக இருந்த தினசரி பஞ்சு வரத்து, தற்போது, 19,000 பேல்களாக குறைந்தது.
நடப்பு பருத்தி ஆண்டில் (2024 அக்., - 2025 செப்.,), பருத்தி மகசூல் குறைந்துவிட்டதால், உள்நாட்டு தேவையான 315 லட்சம் பேல்களுக்கு இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இக்கட்டான நிலையை முன்கூட்டியே உணர்ந்த மத்திய ஜவுளித்துறை கமிஷனரகம், பஞ்சு இறக்குமதிக்கான தடைகளை நீக்க களமிறங்கியது.
தொழில் அமைப்புகளுடன், கடந்த ஏப்., மாதம், ஜவுளித்துறை கமிஷனர் ரூப் ரிஷி ஆலோசனை நடத்தினார். அதில், பஞ்சுக்கான இறக்குமதி வரி 11 சதவீதத்தை முற்றிலும் ரத்து செய்ய, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு விரைவில் வரி ரத்தை அறிவிக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.