Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜவுளி உற்பத்தியாளருடன் பேச்சு: விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

ஜவுளி உற்பத்தியாளருடன் பேச்சு: விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

ஜவுளி உற்பத்தியாளருடன் பேச்சு: விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

ஜவுளி உற்பத்தியாளருடன் பேச்சு: விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

ADDED : மார் 22, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
பல்லடம்,: நாளை மறுநாள் நடைபெறும் ஜவுளி உற்பத்தியாளருடனான பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விசைத்தறியாளர்கள் உள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம், தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன.

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் விசைத்தறியாளருக்கும் இடையே, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த, 2014க்குப் பின் முறையான கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்களும் கூலி உயர்வை வலியுறுத்தி வருகின்றனர். கலெக்டர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும் தீர்வு கிடைக்கவில்லை.

கூலி உயர்வை வலியுறுத்தி, சோமனுாரை தலைமையிடமாகக் கொண்ட அவிநாசி, தெக்கலுார், பெருமாநல்லுார், புதுப்பாளையம் ஆகிய சங்கங்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்ட மங்கலம், 63 வேலம்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், 'கடந்த, 2021ல், அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் உயர்த்தப்பட்ட கூலி உயர்வை வலியுறுத்தி வருகிறோம்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். கடந்த நாட்களில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை.

சமீபத்தில், இது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், விசைத்தறியாளர்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இதன்படி, 24ம் தேதி அன்று கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், ஜவுளி உற்பத்தியாளர்களும் பங்கேற்கும் நிலையில், கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us